யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில், வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் த.சத்தியமூர்த்தி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியதற்காக வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையிலும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்திலும் இதுவரை சுமார் 13ஆயிரத்திற்கும் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்கும் சிறப்பு விடுதி தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கின்றது. இன்றும் ஒருவர் சந்தேகத்தினடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.