
வவுனியாவில் அதிகளவானோர் பி.சி.ஆர் பரிசோதனைக்குள்!
கம்பஹா மாவட்டத்தில் கொரொனோ வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 98 பேருக்கு இன்றைய தினம் காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் உறவினர்களை, மினுவாங்கொடையில் இருந்து வந்து சந்தித்த பெண் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 3 சிறுபிள்ளைகள் என 5பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் தொடர்புகளை பேணியதாக தெரிவித்து வவுனியா நகர்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் இரு பெண்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும் கொரோனோ உறுதிப்படுத்தப்பட்ட தமது சகோதரி கடந்த மாதம் 10 ஆம் திகதியே தமது வீட்டிற்கு இறுதியாக வந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ் போதனாவைத்தியசாலையின் ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.