கொரோனா உச்சத்தை தொடுவது முடிவுக்கு வருகிறது?- விழா காலங்களில் மீண்டும் பரவ வாய்ப்பு

3 வாரங்களாக நோய் பரவல் குறைந்து வருவது கொரோனா உச்சத்தை எட்டி விட்டு சரிந்து வருகிறதா? என்ற வினாவை எழுப்பி உள்ளது. இனி தொடர்ந்து சரியலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த மாதம் 1 லட்சத்தை தொடும் நிலைக்கு வந்தது. ஆனால் அதன்பிறகு நோய் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 3 வாரங்களாக நோய் பரவல் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தற்போது 60 ஆயிரத்தில் இருந்து 65 ஆயிரத்துக்குள் தினசரி பாதிப்பு உள்ளது.

கொரோனா நோய் இன்னும் அதிகரித்து அது உச்சத்தை நோக்கி செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் கூறி இருந்தனர். ஆனால் 3 வாரங்களாக நோய் பரவல் குறைந்து வருவது கொரோனா உச்சத்தை எட்டி விட்டு சரிந்து வருகிறதா? என்ற வினாவை எழுப்பி உள்ளது. இனி தொடர்ந்து சரியலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பல மாநிலங்களில் நோய் பரவல் கடுமையாக சரிந்துள்ளது. மராட்டியத்தில் தினசரி புதிய தொற்று 20 ஆயிரம் வரை எட்டிய நிலையில் தற்போது 12 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

டெல்லி, உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், ஜார்கண்ட், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நோய் பரவல் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

அதே நேரத்தில் குஜராத், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நோய் பரவல் ஒரே நிலையில் சீராக இருக்கிறது. கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் அதிகரித்து காணப்படுகிறது.

ஆனாலும் நோய் தொற்று மேலும் சரியுமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது.

நிபுணர்கள் இதுபற்றி கூறும்போது, “இந்தியாவில் இன்னும் அதிகபட்சமாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதன்உச்சம் இன்னும் வரவில்லை” என்கின்றனர்.

அடுத்ததாக சரஸ்வதி பூஜை, துர்க்கா பூஜை, தீபாவளி என விழாக்காலங்கள் வருகின்றன. இந்த நேரத்தில் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவது, ஒருவரையொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது அதிகரிக்கும்.

இந்த நேரத்தில் நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்போது நோய் பரவல் குறைந்து வந்தாலும், அதை நல்ல செய்தியாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மாறலாம் என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர்.

இதுவரை நாடு முழுவதும் 8 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 80 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு வீழ்ச்சியை நோக்கி செல்வதாக சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கூறி உள்ளார்.

தற்போதைய நிலையில் 9 லட்சத்து 19 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

அதற்கடுத்ததாக ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

ஒருபக்கம் பாதிப்பு குறைந்துவரும் அதே நேரத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 84.7 சதவீதம் பேர் குணமடைந்து இருக்கிறார்கள். அதன் எண்ணிக்கையும் மேலும் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.