
கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன்னெடுத்து செல்கின்றனர் – நரேந்திர மோடி
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வை, மக்கள் இயக்கம் என்ற பெயரில் மோடி முன்னெடுத்துள்ளார்.
ருவிட்டரின் மூலம் இந்த பிரசாரத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை மக்களே கையில் எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். கொரோனா முன்கள போராளிகளால் அதற்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இணைவோம் என்ற ஹாஷ்டாக்குடன் ருவிட்டர் பதிவிட்டுள்ள அவர், முகக்கவசம் அணிவதையும், கைகளை அடிக்கடி கழுவுவதையும், சமுக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் எப்போதும் நினைவுகொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை மாதங்கள் மற்றும் குளிர்காலம் வரவுள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பிரசாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.