தமிழகத்தில் ஒரேநாளில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் நேற்று 83 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

 

அந்த தகவலின் படி, மாநிலத்தில் நேற்று 4 ஆயிரத்து 666 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 

இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 117 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 57 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. 

 

அதன்படி, மாநிலத்தில் நேற்று 83 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்து 46 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது. 

 

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 85 ஆயிரத்து 509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 84 லட்சத்து 88 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.

 

பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.