
மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா
மேற்கு பசுபிக்கில் சீனாவின் மோசமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள அமெரிக்க கடலோர காவற்படையின் ரோந்துக்கப்பல்களை நிலை நிறுத்த தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவே பசுபிக்கிற்கான சக்தி என வர்ணித்துள்ள அவர், சீனாவின் இத்தகைய செயற்பாடுகள் பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சீனாவின் அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகள், இந்தோ பசுபிக்கில் உள்ள ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்தும் செயற்பாடுகள் போன்றவை எங்கள் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தீய நோக்கங்களை கொண்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு எல்லைப் பாதுகாப்புக் கடலோர காவற்படையின் ரோந்துக்கப்பல்களை பயன்படுத்துவது அவசியம்.
தென் பசுபிக்கில் உள்ள பகுதிகளில் கடலோர கண்காணிப்பு கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச்செய்வது குறித்தும் அண்மைக்காலமாக ஆராயப்பட்டு வருகிறது.
மைக் பொம்பியோவின் ஆசிய விஜயத்திலும் சுதந்திரமான - வெளிப்படையான இந்தோ பசுபிக் தொடர்பான முக்கிய பேச்சுக்கள் இடம்பெறவுள்ளது என்றார்.