மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தகவல்

மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தகவல்

இலங்கை வருகின்றன அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என்று, அமெரிக்காவின் டென்னிசீ மாநிலத்தில் இயங்கும் த டென்னிசீ ட்ரிபியுன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் இலங்கை வருகின்ற அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது அவர் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துவார் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதேநேரம், மைக் பொம்பியோ 480 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பாகவும் அவதானம் செலுத்துவார் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கின்ற போதும், அவ்வாறான இலக்குகள் எதுவும்இந்த விஜயத்தில் இல்லை என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை வருகின்ற மைக் பொம்பியோ, இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இதுதொடர்பாக பொம்பியோவிற்கு சர்வதேச மன்னிப்பு சபை கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் ஆகின்ற போதும், இன்னும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்னும் பொறுப்புக்கூறவில்லை.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் மனித உரிமைகள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பல்வேறு கெடுபிடிகள் இடம்பெறுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் மைக் பொம்பியோ அவதானம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.