கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பாவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், பிரித்தானியா, நெதர்லாந்து முதலான நாடுகளிலும், ரஷ்யாவிலும் மூன்றில் இரண்டு பங்கு மரணவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் வைத்தியர் மார்க்ரட் ஹெரிஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் 320 புதிய மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேஸில் முதலான நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடாக ரஷ்யா பதிவாகியுள்ளது.

இதேநேரம், சர்வதேச ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 901 பேர் கொரோனாவினால் மரணித்துள்ளனர்.

இதன்படி, கொவிட்-19 தொற்றினால் சர்வதேச ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 11 இலட்சத்து 71 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 920 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 இலட்சத்து 21 ஆயிரத்து 833 ஆக உயர்வடைந்துள்ளது.