தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் முதலிடம்

தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ சேவை வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ‘இசஞ்சீவனி’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வெளிநோயாளிகள் பிரிவு 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களுடன் 217 ஆன்லைன் பிரிவுகளில் சேவை வழங்குகிறது. இந்த தளத்தில் இதுவரை நாடு முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரத்து 164 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

 


இந்த ஆலோசனை வழங்கலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. இரண்டாவதாக உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 553 ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய தமிழக மாவட்டங்கள் நாட்டிலேயே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.