
இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 3-வது நபர் கைது
அரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3-வது நபர் கைது செய்யப்பட்டார்.
அரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி(திங்கள்கிழமை) மதியம் 3.30 மணியளவில் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த இளம் பெண்ணை கல்லூரி வாசல் முன் நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாகியால் சுடப்பட்ட அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.
அந்த விசாரணையில் உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நிகிதா தோமர் (வயது 21) என்பதும், கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுத வந்த அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தௌஃபீக் மற்றும் ரீஹான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தௌஃபீக் மற்றும் ரீஹான் இருவரும் தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் நிகிதாவிற்கு தௌஃபீக் ஏற்கனெவே அறிமுகமானவர் என்று தெரிய வந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிகிதாவை தௌஃபீக் வற்புறுத்தி வந்ததாக கூறப்பட்டுகிறது.
இது தொடர்பாக நிகிதாவின் குடும்பத்தினர் தௌஃபீக் மீது கடந்த 2018ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நிகிதா துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படும் முன் அவரை தௌஃபீக் தனது காரில் கடத்தி செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு நிகிதா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் நிகிதாவை தௌஃபீக் சுட்டுக்கொன்றுள்ளார்.
இந்த வழக்கில் தௌஃபீக் மற்றும் அவனது கூட்டாளி ரீஹான் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிகிதாவை கொல்ல நாட்டுத்துப்பாக்கி வழங்கிய அஜ்ரூ என்ற நபரை அரியானா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதனால், இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தௌஃபீக் தனது மகளுக்கு 3 ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவளை கட்டாய திருமணம் செய்து மதமாற்றத்தில் ஈடுபட தௌஃபீக் முயற்சித்ததாகவும் நிகிதாவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.