நாட்டில் சமூகத் தொற்று ஏற்படவில்லை அடித்துக் கூறும் சுகாதார அமைச்சு!

நாட்டில் சமூகத் தொற்று ஏற்படவில்லை அடித்துக் கூறும் சுகாதார அமைச்சு!

ஸ்ரீலங்காவில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டில் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு அடித்துக் கூறியுள்ளது. இருந்த போதிலும், பல பகுதிகளிலும் கிளைக் கொத்தணிகள் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் பல உள்ளன என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் 21 மாவட்டங்களுக்கு பரவியிருப்பதாக முன்னணி மருத்துவத் தொழிற்சங்கமான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்து வருகின்றது. இதன் காரணமாக அரசாங்கம் முன்னரை விடவும் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த சங்கம் விடுத்துள்ளதுடன், சமூகப் பரவலாக கொரோனா மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் மாறிவிட்டது என்று கூறமுடியாது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளரான மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் உறுதியாகக் கூற முடியும். அதற்கான உறுதிப்படுத்தல்கள் எம்மிடமுள்ளன. ஆனால், சில பகுதிகளில் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே, கிளை கொத்தணிகள் பல உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

எனவே நாம் அனைவரும் கவனயீனமாக செயற்படுவோமானால் விரைவில் சமூக தொற்றை நோக்கிச்செல்ல வேண்டியேற்படும். அபாயமான நிலைமைக்கு முன்னால் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றதால், அபாயநிலைமை குறைந்துவிட்டது என்று கூறமுடியாது.

பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கமைய இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். எனினும், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை ஒன்றிணைந்து போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அபாயமான நிலைமை காணப்பட்டாலும் முறையான வழிமுறைகளைக் கடுமையாக பின்பற்றினால் அவற்றிலிருந்து விடுபட முடியும்.

நாளொன்றுக்கு 7000 - 8000 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கக் கூடியளவிலான தயார்ப்படுத்தல்கள் சுகாதார அமைச்சினால் செய்யப்பட்டுள்ளன. எனினும், தற்போது பழுதடைந்துள்ள இயந்திரம் நாளொன்றுக்கு 7,000-8,000 சுமார் மாதிரிகளை பரிசோதனை செய்யக்கூடியது. குறித்த இயந்திரம் வெகுவிரையில் திருத்தப்பட்டு வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.