மன்னாரில் கிராம அலுவலர் படுகொலை! அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா? அணிதிரண்ட பணியாளர்கள்

மன்னாரில் கிராம அலுவலர் படுகொலை! அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா? அணிதிரண்ட பணியாளர்கள்

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் வயது-55 என்பருடைய கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கோரியும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள் இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன் இன்று காலை 9.30 மணிய முதல் 10.30 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு பட்டி அணிந்து பல்வேறு வதசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பதாதைகளில் அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா?, கொலையாளி யார்? விசாரனையை துரிதப்படுத்துங்கள், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், கிராம அலுவலகர் விஜியேந்திரனின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகரின் மரணம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலைகாரர்களை கைது செய்யது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பை கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் என்பவர் கடந்த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.