கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுறுதியாளர்கள் தொடர்பிலான முழுமையான விபரங்கள்...!

கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுறுதியாளர்கள் தொடர்பிலான முழுமையான விபரங்கள்...!

கொவிட் 19 நோயால் இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

78 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை தெரியவந்திருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அவரது மரணத்துக்கான காரணம் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நாட்டில் நேற்றைய தினம் 510 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலபிட்டி, பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்து 609 கொவிட் 19 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

63 பெண் கைதிகளுக்கும், 8 ஆண் கைதிகளுக்கும் ஒரு பணியாளருக்கும் இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 562 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹொரணை - பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.