
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் நபர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு பகுதிகளுக்கு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள் தொழில் நிமித்தம் வெளியேறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பிரவேசிக்கும் போது உண்மையான தரவுகளை வழங்க வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான இடங்களில் உண்மைக்கு புறம்பான தரவுகளை பதிவு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஊழியர்கள் பணிகளுக்கு சமூகமளிக்க விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வலயங்களில் அனுமதி வழங்கப்பட்ட தொழிற்சாலைகளை நடத்தி செல்வதற்கும் அதன் சேவையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கும் உட்பிரவேசிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் அங்கிருந்து வெளியேறவும் மீண்டும் உட்பிரவேசிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.