நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்

நாட்டில் மேலும் 305 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 5 ஆயிரத்து 17 கொவிட் 19 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் 12 வயதுடைய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது தந்தைக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில், அவர் ஹம்பாந்தோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இந்தநிலையில், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 கொவிட்19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 667 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 193 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் அவர்களில் 147 பேர் கொழும்பு மாநகர சபை அதிகார பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 99 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

களுத்துறை மாவட்டத்தில் 28 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 8 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 7 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 3 பேருக்கும், காலி மாவட்டத்தில் 2 பேருக்கும், புத்தளம், திருகோணமலை மற்றும் அநுராதாபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது.

அதேநேரம், கொழும்பு – புறக்கோட்டை, மெனிங்சந்தை அண்மித்த பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் பொதி சுமப்பாளர்கள் 67 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக சுகாதார அமைச்சால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.