மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் : வட மாகாண முன்னாள் ஆளுநர் சூளுரை

மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் : வட மாகாண முன்னாள் ஆளுநர் சூளுரை

30 வருடகால போருக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ரீதியிலான தாக்கம் இன்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோமெனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் நேற்று ஹற்றனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த கட்சி, மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்த கேள்வியை எழுப்பும்போது அந்த கட்சியில் உள்ளவர்களே திருப்தியடைய முடியாத அளவுக்குதான் நிலைமை உள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தெளிவான வெற்றியைபெற்று, பலமானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழ்நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.