சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பம்பை முதல் சன்னிதானம் வரை 5 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார். அப்போது கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளுக்கு பின்பு இரவு நடை அடைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து, பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் நேற்று ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டிருந்தன.

 


ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சான்றிதழ்களுடன் வந்தவர்களிடம் இருந்த சான்றிதழ்கள் நிலக்கல்லில் பரிசோதிக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சென்றவர்கள் மருத்துவ பரிசோதனை எடுத்து 24 மணி நேரம் கடந்திருந்தால், அவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

முன்பதிவு செய்த போது ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு முதற்கட்டமாக நிலக்கல்லிலும் தொடர்ந்து பம்பை மற்றும் வலியநடை பந்தல் ஆகிய பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு இலையில் பிரசாதம் வழங்கினார்.

நேற்று காலை 7 மணிக்கு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். அவருக்கு மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி பிரசாதம் வழங்கினார்.

பின்னர், சன்னிதானத்தில் மந்திரி தலைமையில் அனைத்து துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர்கள் விஜயகுமார், ரவி, செயல் அதிகாரி ராஜேந்திர பிரசாத், தேவஸ்தான கமிஷனர் திருமேனி, தலைமை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் கடகம் பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஐயப்ப பக்தர்களின் அவசர தேவைக்காக பம்பையில் 20 ஆம்புலன்சுகள் தயாராக உள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை 5 இடங்களில் அவசர முதலுதவி சிகிச்சை அளிக்க நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை, எருமேலி, சன்னிதானம் ஆகிய இடங்களில் தற்காலிக மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. சுகாதாரம் தொடர்பான அவசர கால பணிகளுக்கு ஐயப்பா சேவா சங்கத்தின் 60 தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக பம்பை முதல் சன்னிதானம் வரை ஆங்காங்கே சானிட்டைசர் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.