
நியாயமான தீர்வு வேண்டும் - இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்...!
இலங்கையில் இருந்து படகுகளை மீட்டுக் கொண்டுவர முடியாது என மத்திய, மாநில அரசாங்கங்கள் கருதுவது தங்களது இயலாமையையே வெளிக்கொணர்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்
இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்கு ஒரு புதிய படகை நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளைத் திரும்பப் பெறுவதற்கான எந்த முயற்சியிலும் இந்திய அரசாங்கம் ஈடுபடவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 1,300 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மீனவர்களிடமிருந்து ஏறத்தாழ 350 க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றை, விற்பனை செய்வதற்கு அல்லது அழிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்கிறது.
இதனால் தமிழக மீனவர்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு தான் காரணமாகும் என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
எனவே, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லையெனில், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பாக சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் மீனவர்களை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்