
தந்தையின் மோசடியான செயற்பாடு -10 கிலோ மீற்றர் நடந்து சென்று முறைப்பாடு அளித்த சிறுமியின் துணிச்சல்
தாய் மரணித்த நிலையில் உறவினர்களின் வீட்டில் வசித்து கல்வி கற்கும் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சிறுமி தனது தந்தை செய்த மோசடியான செயற்பாட்டுக்காக பத்து கிலோமீற்றர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறைப்பாடு அளித்தது அனைவரைது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அத்துடன் குறித்த சிறுமியின் துணிச்சலை பல்வேறு தரப்பினரும் பாராட்டியும் வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
இந்தியாவின் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தின் டுகுகா கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுமி சங்கீதா சேத்தி.ஆறாம் வகுப்பில் படிக்கும் இவரது தாயார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மறுமணம் செய்து கொண்டு அவரை பார்த்துக் கொள்ளாததால், தனது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த சூழலில், கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கான அரிசி மற்றும் பணத்தை ஒடிசா மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு வருகிறது. அதன்படி, நாள்தோறும் ரூ.8 மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மாணவர்களிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றால் அவர்களது பெற்றோர் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இதுதவிர 150 கிராம் அரிசியும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதிய உணவிற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் பணத்தை தனது தந்தை வழங்க மறுப்பதாக கூறி சிறுமி சங்கீதா சேத்தி சுமார் 10 கி.மீ தூரம் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த கேந்திரபாரா ஆட்சியர் சமர்த் வர்மா, அரசு வழங்கும் பணத்தை சிறுமி சங்கீதா சேத்தியின் வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சிறுமிக்கு வழங்கப்படும் அரிசியை அவரிடமே ஒப்ப்டைக்கவும் பாடசாலை அதிபருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணத்தையும் அரிசியையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.