
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் குழந்தைகள் காப்பகங்கள் மூலம் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதியை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா உள்பட 5 தென்னக மாநிலங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வரும் 638 குழந்தைகள் காப்பகங்களில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் (என்.சி.பி.சி.ஆர்.) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது இந்த காப்பகங்கள் கடந்த 2018-19-ம் ஆண்டில் மட்டும் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதியை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.2.12 லட்சம் முதல் ரூ.6.60 லட்சம் வரை வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்படி, குழந்தை ஒன்றுக்கு அனைத்து விதமான செலவினங்கள் உள்பட ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ.60 ஆயிரம் வரை ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் இதைவிட பல மடங்கு பணம் பெற்றிருப்பதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே நாடு முழுவதும் அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக என்.சி.பி.சி.ஆர். தலைவர் பிரியங் கனூங்கோ தெரிவித்துள்ளார்.