
வாகன வருமான வரிப்பத்திரம் புதுப்பித்தல் தொடர்பாக விசேட அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் ஜே.எம்.சீ ஜயந்தி விஜேதுங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல் மாகாணத்தில் பயணத்தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை காலாவதியான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் அலுவலகங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.