ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பிரசவத்தில் தாய், குழந்தை பலி

மராட்டியத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் பிரசவத்தில் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் மோக்டா அருகே அம்லே கிராமத்தை சேர்ந்தவர் சானியா. இவரது மனைவி மணிஷா(வயது25). இவர் 7 மாத கர்ப்பமாக இருந்தார். சம்பவத்தன்று திடீரென மணிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சை தொடர்பு கொண்டு வரும்படி அழைப்பு விடுத்தார்.

 


ஆனால் வெகுநேரமாக ஆம்புலன்சு வராததால் சானியா உள்பட 4 பேர் சேர்ந்து போர்வையில் மணிஷாவை தூக்கிக்கொண்டு 3 கி.மீ. தூரத்தில் உள்ள வாடா சாலைக்கு நடந்து வந்தனர். அங்கு சுமார் 2 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது.

பின்னர் அதில் மணிஷாவை ஏற்றிக்கொண்டு நாசிக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதை தொடர்ந்து அதிக ரத்தபோக்கு காரணமாக மணிஷா அடுத்த நாள் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்புலன்சு வர காலதாமதம் ஆனதால் தான் தாயும், சேயும் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பால்கர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தயானந்த் சூர்யவன்சி கூறியதாவது:-

“உள்ளூர் பொது சுகாதார மையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் பணியில் உள்ளது. கொரோனா பணிக்காக விக்ரம்காட் பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்று இருந்ததால் வர காலதாமதம் ஆனது. மற்றொரு வாகனம் பழுதாகி உள்ளது. இதுவே ஆம்புலன்சு தாமதமாக வர காரணம். இதுமட்டும் இன்றி விசாரணையில், இறந்த பெண்ணுக்கு மோசமான மகப்பேறு வரலாறு உள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அவருக்கு ஒருமுறை கரு கலைந்துள்ளது. மேலும் ஒரு முறை குழந்தை இறந்தநிலையில் பிறந்துள்ளது.

மீண்டும் ஒருமுறை கருத்தரித்தால் அவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். பிரவசத்தின்போது 5 முறை சோதனை செய்ததில் அவரின் எடை குறைவாக இருந்ததும், ரத்த அழுத்தம் மிக குறைவாக இருந்ததும் தெரியவந்துள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.