கொரோனா புதிய பாதிப்பு நேற்றைவிட குறைவு... இந்தியாவில் 94.45 சதவீதம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96.77 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 91.39 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96.77 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 96,77,203 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 391 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,573 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,39,901 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 39,109 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,96,729 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 14,77,87,656 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 8,01,081 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.