
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம்
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை மீளப்பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் 12ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விவசாயிகளின் குறித்த போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பாக, இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக 1000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘பஞ்சாப் விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்று கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டப்போது, லண்டன் பொலிஸார் போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள், ஒரு இடத்தில் கூடினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து கொவிட் -19 விதிகளை மீறியதற்காக பலர் கைது செய்யப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது