ஐஸ் ரக போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்..!

ஐஸ் ரக போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்..!

மாராவில் - தொடுவாவ பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாராவில் மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதத்திற்கும் அதிக காலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் மன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் குறித்த போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சந்தேகநபர் டுபாயில் தலைமறைவாக இருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய சர்வதேச காவல்துறையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெமட்டகொடை மற்றும் கனேமுல்லை பகுதிகளை சேர்ந்தவர்களாவர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் தொடுவாவ பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயினையும் 100 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளையும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவற்றின் பெறுமதி 200 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.