புதிய பாதிப்பு 32 ஆயிரமாக குறைந்தது... இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 94.66 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97.35 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 92.15 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97.35 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 97,35,850 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 402 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,41,360 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,15,581 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 36,635 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,78,909 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 14,98,36,767 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,22,712 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.