
தமிழகத்தில் பழைய நாணயத் தாள்களைக் கழிவு நீர் வாய்க்காலில் வீசிச் சென்ற நபர்!
தமிழகம்: கடலூரில் பழைய 500 மற்றும் 1000 ரூபா நாணயத் தாள்களை மர்ம நபரொருவர் கழிவு நீர் வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி இந்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபா நாணயத் தாள்களை பண மதிப்பிழப்புச் செய்தது.
மேலும் பழைய 500, 1000 ரூபா நாணயத் தாள்களை மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட நாட்கள் காலக்கெடு விதித்தது.இதனால் பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய நாணயத் தாள்களை வங்கிகளில் கொண்டு சென்று மாற்றினர்.
இதற்கிடையே காலக்கெடு முடிந்த பின்னர் பலர் தாங்கள் வைத்திருந்த பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாணயத் தாள்களை மாற்ற முடியாத விரக்தியில் குப்பைகளில் வீசிய சம்பவமும், தீவைத்து எரித்த சம்பவமும் நடந்தன.
இந் நிலையில் கடலூரில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபா நாணயத் தாள்களை மர்ம நபரொருவர் கழிவு நீர் வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் மர்ம நபர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல ஆயிரம் ரூபா நாணயத் தாள்களை அதிகாலை நேரத்தில் கொண்டு வந்து கிழித்து வாய்க்காலில் வீசிச் சென்றது தெரியவந்தது.
மேலும் அதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இச் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.