
சபரிமலையில் இதுவரை 220 பேருக்கு கொரோனா தொற்று
சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இந்தநிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், உச்சபச்சமாக ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உருவானது. அந்த வகையில் சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் குறித்து விவாதிப்பதற்காக சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி பிரசாந்தன் காணி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செயல் அதிகாரி சத்யபாலன், விழா கட்டுப்பாட்டு அதிகாரி மதுசூதனன், கொரோனா முதல் நிலை சிகிச்சை மைய மருத்துவ அதிகாரி பிரசாத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரசாந்தன் காணி கூறியதாவது:-
சபரிமலையில் பணியில் உள்ள அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் அவர்கள் உடனடியாக சபரிமலை சிறப்பு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சபரிமலை சிறப்பு பணியில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை முறையாக கடை பிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து இருப்பதுடன் அவ்வப்போது சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பணி நேரங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஓய்வு நேரங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.