
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 96 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,55,560 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 333 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,810 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,06,111 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25,709 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,03,639 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 16,20,98,329 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 9,00,134 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.