இந்தியாவில் புதிதாக 23,950 பேருக்கு கொரோனா பாதிப்பு... மீட்பு விகிதம் 95.69 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 95.69 சதவீதம் நபர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,99,066 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 333 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,444 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,63,382 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,895 பேர் குணமடைந்துள்ளனர்.

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,89,240 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 16,42,68,721 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,98,164 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

 

இதற்கிடையே பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா, இந்தியாவில் பரவாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.