
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்யும்படி விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 29-வது நாளை எட்டி உள்ளது. மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், விவசாயிகள் தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட திருத்தங்களை மீண்டும் முன்வைக்கக் கூடாது என்றும், ஆக்கப்பூர்வமான உறுதியான திட்டங்களை எழுத்துப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளன.
இந்நிலையில், விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடக் கோரி 2 கோடி நபர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துடன் கூடிய மனுவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.