
டெல்லி எல்லையில் விவசாயிகள் 34-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் இன்று 34-வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதை விவசாயசங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
இதையடுத்து மத்திய வேளாண்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், 40 விவசாய சங்கங்களுக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் 30-ந்தேதி (நாளை) பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடை பெறும்.
இதில் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகெத் கூறுகையில்,
‘மத்திய அரசுடன் 6-வது சுற்று பேச்சு வார்த்தையில் பங்கேற்க உள்ளோம். அப்போது 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது குறித்தும், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல் செய்வது குறித்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எங்களின் கோரிக்கை களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்’’ என்றார்.
இந்தநிலையில் 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஆலோசிக்க வேண்டிய 4 முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.
* வேளாண் சட்டங் களை வாபஸ் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
* குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்பதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வேளாண் கழிவுகளை எரிப்பது தொடர் பாக விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
* மின்சார திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் ஆகிய 4 நிபந்தனைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
நாளை 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில் பேச்சு வார்த்தைக்கு இரு தரப்பினரும் தயாராகிறார்கள்.
விவசாயிகள் முன் வைத் துள்ள 4 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்குமா என்பது நாளை நடைபெறும் 6-வது சுற்று பேச்சுவார்த்தை யின் போது தெரியவரும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலும் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது விவசாயிகளுடனான 6-வது சுற்று பேச்சு வார்த்தையின் போது அரசு தரப்பில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 விவசாய சங்கங்களின் தலைவர்கள், மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்கள். அப்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு அவர்கள் முழு ஆதரவை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் என்னை சந்தித்து பேசினர். புதிய வேளாண் சட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.