சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

கேரள மாநில ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் விசே‌ஷமாகும். மண்டல பூஜைக்காக கடந்த மாதம்(நவம்பர்) 15-ந்தேதி திறக்கப்பட்ட கோவில்நடை, கடந்த 26-ந்தேதி அடைக்கப்பட்டது.

 


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனத்துக்கு ஆன்-லைனில் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், சன்னிதானம்- பம்பை உள்ளிட்ட இடங்களில் தங்குவதற்கு மற்றும் பம்பை ஆற்றில் குளிப்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

அது மட்டுமின்றி சாமி தரிசனம் செய்ய முதலில் தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 2ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் தினமும் 2ஆயிரம் பேருக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 3ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தினமும் சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது. முதல் நாளான இன்று வேறு எந்த பூஜைகளும் நடத்தப்படாது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நாளை (31-ந்தேதி) முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக நாளை அதிகாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மகரவிளக்கு பூஜைக்காக ஜனவரி 20-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே 2ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கான முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான முன்பதிவு நேற்றுமுன்தினம்(28-ந்தேதி) மாலை தொடங்கியது. அதில் சபரிமலைக்கு செல்வதற்காக காத்திருந்த மேலும் பல பக்தர்களுக்கு அனுமதி கிடைத்தது.

மண்டல காலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் மகரவிளக்கு காலத்திலும் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.