
புதுவருடத்தை முன்னிட்டு டெல்லியில் ஊரடங்கு உத்தரவு..!
இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் இன்று இரவு 11 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருட பிறப்பை முன்னிட்டு மக்கள் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட உரு திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 20 பேர் இதுவரையில் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களின் பின்னர் தற்போது தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.
இதற்கிடையில் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 21 ஆயிரத்து 822 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 229 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் 148738 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் தொற்றுறுதியான 98 லட்சத்து 60 ஆயிரத்து 280 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.