இந்தியாவில் புதிதாக 20,036 பேருக்கு தொற்று... கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,036 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரத்திற்குள் உள்ளது. அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,86,710 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 256 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,48,994 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 23,181 பேர் குணமடைந்துள்ளனர்.

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,54,254 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாளை தொடங்க உள்ளது. விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளதால், புத்தாண்டில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.