இன்றைய புதிய தொழில் நிறுவனங்கள், நாளை பன்னாட்டு நிறுவனங்களாக மாறும் - பிரதமர் மோடி பேச்சு

சம்பல்பூர் ஐ.ஐ.எம். விழாவில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய ஸ்டார்ட் அப் (புதிய) நிறுவனங்கள், நாளை பன்னாட்டு நிறுவனங்களாக மாறும் என்று கூறினார்.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துக்கு (ஐ.ஐ.எம்.) நிரந்தர வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

 


பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார். மாநில கவர்னர் கணே‌ஷி லால், முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரிகள் ரமே‌‌ஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசுகையில் கூறியதாவது:-

சம்பல்பூர் ஐ.ஐ.எம். நிரந்தர வளாகம் ஒடிசாவின் கலாசாரத்தையும், வளங்களையும் எடுத்துக்காட்டுவதுடன், ஒடிசாவுக்கு நிர்வாக துறையில் உலகளாவிய அங்கீகாரத்தையும் அளிக்கும்.

தற்போது நாட்டில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் வருவதை காண முடிகிறது.

இந்த கடினமான தருணத்திலும், விவசாய துறையில் அதிரடியான சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், மாணவர்கள் நாட்டின் அபிலாசையுடன் தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புதிய தசாப்தத்தில் (தசாப்தம் என்பது 10 ஆண்டுகள்), இந்தியாவுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவது உங்கள் பொறுப்பு ஆகும்.

நிர்வாகத்தில் கூட்டு, புதுமை, உருமாறும் கருத்துகள் ஆகியவற்றின் உதவியுடன் தற்சார்பு இந்தியா என்ற குறிக்கோளை அடைய முடியும். தொழில்நுட்பமானது, பிராந்தியங்களுக்கு இடையேயான தூரத்தை குறைத்து வருகிறது. உலகெங்கும் நிகழ்கிற மாற்றங்களை சமாளிப்பதற்காக டிஜிட்டல் இணைப்பு துறையில் இந்தியா விரைவான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப மேலாண்மை என்பது மனித மேலாண்மை போல முக்கியமானது.

கடந்த 10 ஆண்டுகளில், நாடு கணிசமான திறனை உருவாக்க முடிந்தது. இது கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது தெளிவாக தெரிந்தது. எல்லா அம்சங்களும் அடங்கிய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இளம்தலைமுறையினர், பின்தங்கியவர்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு வர வேண்டும்.

புதிய மேலாண்மை கருத்துகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உள்ளூர் தயாரிப்புகள் உலகளாவிய ரீதியில் எட்டும்.

இன்றைய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், நாளை பன்னாட்டு நிறுவனங்களாக மாறும்.

சம்பல்பூர் ஐ.ஐ.எம்., ஒடிசாவுக்கு மேலாண்மை கல்வி துறையில் ஒரு புதிய அடையாளத்தை வழங்குவதில் நீண்ட தூரம் செல்லும்.

இந்தியா கொரோனா வைரஸ் நெருக்கடியை இவ்வளவு பெரிய அளவில் புதுமை மற்றும் ஒத்துழைப்புடன் எவ்வாறு கையாண்டது என்பதை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் திறன், உயர் மட்ட திறன் எவ்வாறு விரிவடைந்தது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

நல்ல நிர்வாகிகளாக மாறுவதற்கு நாட்டின் முன் உள்ள சவால்களை புரிந்து கொள்வது முக்கியம் ஆகும். தேசிய கல்வி கொள்கை, பரந்த அளவிலான, பன்முக ஒழுங்கு மற்றும் முழுமையான அணுகுமுறையை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.