
வடக்கு ஆளுநரின் அசண்டையீனத்தால் மாணவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்!
முல்லைத்தீவில் வட மாகாண ஆளுநரின் வருகைக்காக காத்திருந்த பாடசாலைச் சமூகத்தை பி.எஸ்.எம் சாள்ஸ் அசண்டையீனமாக கடந்து சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று நண்பகல் ஒரு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அந்நிகழ்விற்கு வருகை தராது அவ்வீதி வழியே ஆளுநர் கடந்து சென்றமை மாணவர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு பாடசாலையில் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விட்டு, 1.50 மணி வரை பாடசாலை வாயிலில் ஆசிரியர்கள் மாணவர்கள் காத்திருந்த வேளை,
அவ்வீதி வழியே வருகை தந்த ஆளுநர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதன் பின்னர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வுகளுக்கு வருவதாகவும் கூறிவிட்டு மாவட்ட செயலகம் நோக்கி சென்றுள்ளார்.
பல மணி நேரமாக ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் காத்திருந்தும் ஆளுநர் பாடசாலையை கடந்து சென்றமையால் நிகழ்வுக்காக வருகைதந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.