நாட்டில் பிறப்பை விட இறப்பு பதிவுகள் குறைவு - ஆய்வில் தகவல்

நாட்டில் பிறப்புகளைவிட இறப்பு பதிவு வீதம் குறைவாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு ஆராய்ந்து உள்ளது.

நாட்டில் பிறப்புகளைவிட இறப்பு பதிவு வீதம் குறைவாக இருக்கிறது. இதுகுறித்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

 


நாட்டில் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2020-ம் ஆண்டுக்குள் இந்த பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பியது. ஆனால் அது சாத்தியம் ஆவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய ஒரு தரவு காண்பிக்கிறது.

கேரளா, கர்நாடகா உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 ஆண்டு விவரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தரவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இதன்படி நாட்டில் கோவா மாநிலம் மட்டுமே பிறப்புகளையும், இறப்புகளையும் 100 சதவீதம் பதிவு செய்து இருக்கிறது. கேரள மாநிலம் 99 சதவீத பிறப்புகளையும், 97.4 சதவீத இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் 97.5 சதவீத பிறப்புகளையும், 93 சதவீத இறப்புகளையும் பதிவு செய்து இருக்கிறது. மராட்டிய மாநிலம் 96.3 சதவீத பிறப்புகளையும், 89.7 சதவீத இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் பிறப்புகளையும், 80 சதவீதத்துக்கு மேல் இறப்புகளையும் பதிவு செய்துள்ளன.

மேற்கண்ட சில மாநிலங்களில் பிறப்பு பதிவில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இறப்பு பதிவு வீதம் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக பீகாரில் 37.1 சதவீத இறப்புகளே பதிவாகி உள்ளன. ஆனால் பிறப்பு பதிவு வீதம் 75.6 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முரண்பாடுகளுக்கான காரணம் குறித்து குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு ஆராய்ந்து வருகிறது.