
கொரோனா அற்ற நாடு! ஸ்ரீலங்கா அரசு போடும் திட்டம்
ஸ்ரீலங்காவானது கொரோனாவிடம் விடுதலை பெற்ற நாடு என கூறுவதன் மூலமே சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை வளர்ச்சியடையச் செய்வது தொடர்பில் எடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சுற்றுலா துறைக்கு அரசாங்கம் இந்த நிவாரண பெக்கேஜ் வழங்குகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்று கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கொரோனாவிடம் விடுதலை பெற்ற நாடு ஸ்ரீலங்கா என கூறுவதன் மூலமே சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
உண்மையாகவே தற்போது ஸ்ரீலங்கா கொரோனா அற்ற நாடாகும். எங்களுக்கு ஐரோப்பா ஒன்றியத்தால் 3.5 டொலர் மில்லியன் நிதி வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.
அந்த பணத்தை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.