
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட கருத்து
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுக்கு முன்பாக இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பதிரன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதார வேலைத்திட்டங்கள் உள்ளன.
கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 6.1 மில்லியன் குடும்பங்களுக்கு 60 பில்லியனுக்கும் அதிகமான நிவாரணத்தை அரசாங்கம் வழங்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல், அனைவரும் தனிப்பட்ட செலவுகளைக் குறைப்பதன் மூலம் முன்மாதிரியான பங்கைக் கொண்டிருந்தனர் என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரன குறிப்பிட்டார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் இலங்கை தனது பொருளாதாரத்தை அண்டை நாடுகளுக்கு முன்பாக மீட்டெடுக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.