சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும்...!

சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும்...!

கொவிட்-19 தொற்று தற்போது இலங்கையில் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடற்படையில் தொற்றுறுதியானர்களையும், வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய நிலையில், தொற்றுறுதியானவர்களையும் தவிர்த்து, சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் இதுவரையில் சமூகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானர்கள் அடையாளம் காணப்படவில்லை.

கடற்படையில் சிலரும், வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்புவர்கள் சிலரும் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கொவிட்-19 காரணமாக 46 வழிகாட்டல் கோவைகள் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

எனினும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும்போது, பொதுமக்கள் இது குறித்து கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வைரஸ் தாக்க நிலையை தவிர்க்கும் பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உரியதாகும்.

இது இரண்டு வாரங்களுக்கோ அல்லது ஒரிரு மாதங்களுக்கோ அன்றி தொடந்து பேணவேண்டியதாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 14 ஆக உள்ளது.

அவர்களில் ஆயிரத்து 619 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், 384 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு கடற்படை சிப்பாய் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.