பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்!
வவுனியா கண்டி வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவ்விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
இன்று காலை11.30 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவருடன் மோதி வீதியோரத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பத்துடனும் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உயர் அழுத்த மின்சார கம்பம் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தின் மீது சரிந்து விழுந்துள்ளது, எனினும் உடனடியாக விரைந்து வந்த மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிசாரின் செயற்பாட்டால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மகேஷ்வர ரட்ணசிங்கம் வயது 59 என்ற முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி அதிஸ்டவசமாக காயங்களின்றி உயிர் பிழைத்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.