
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்:பெற்றோரின் கவனத்திற்கு!
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாமென கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது பல கட்டங்களாக இடம்பெறவுள்ளது. பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் சுகாதார துறை சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுதற்கு வசதிகளை செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும்.
பாடசாலைகளை ஆரம்பிக்கும் முதல் கட்டத்தின் கீழ் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்காக அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகள் திறக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.