
வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு விசேட சலுகை
வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா அழைத்துவரப்பட்டவர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமென வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஈ.எ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இது வரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறானோருக்கு விமான நிலையத்தில் உள்ள சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அப்போது இருந்த நிலைமையின் காரணமாக இவர்களுக்கு சுங்க தீர்வை அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தப்பம் கிடைக்கவில்லை.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாளாந்தம் 100 பேர் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்தவர்களுக்கு சுங்க தீர்வை அற்ற கட்டிட தொகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
விமான நிலைய அதிகாரிகள், இலங்கை சுங்க பகுதி குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமானத்தின் மூலம் வந்த இவர்கள் தமது தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ததாக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் சான்றிதழ், விமான பயண சீட்டு உள்ளிட்ட கடித ஆவணங்களை விமான நிலையத்தில் இதற்காக இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பான முழுமையான விபரம் அடங்கிய ஊடக அறிக்கை ஒன்று எதிர்வரும் தினங்களில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.