கொரோனா அச்சத்தால் இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

கொரோனா அச்சத்தால் இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்திருக்கும் நிலையில் கடல்வழியாக இலங்கைக்குள் ஒருவரையும் நுழைய அனுமதிக்கக்கூடாது என அறிவிப்பு விடப்பட்டிருந்தும் இன்று ஒருவர் நாட்டிற்குள் உள்நுழைந்துள்ளார்.

தமிழகத்திலிருந்து வேலணை பகுதியை சேர்ந்த ஒருவர் நெடுந்தீவு தெற்கு கடற்கரை வழியாக தீவுக்குள் நுழைந்துள்ளார்.

இதனை அறிந்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்புதுறையினர் அவரை கைது செய்து தனிமைப்படுத்தியுள்ளனர்.

சிறிய தெப்பம் ஒன்றில் தமிழகத்திலிருந்து நெடுந்தீவுக்குள் நுழைந்த குறித்த நபர் வேலைணை 2ம் வட்டாரத்தை சேர்ந்த சுரேஸ்(வயது29) என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியா சென்று தங்கச்சிமடம் பகுதியில் தங்கியிருந்த குறித்த நபர் இன்று மதியம் 12 மணியளவில் நெடுந்தீவின் தெற்கு கடற்பகுதி வழியாக தீவுக்குள் நுழைந்துள்ளார்.

குறித்த நபர் நுழைவதை அவதானித்த மீனவர்கள் கடற்றொழிலாளர் சமாசத்திற்கு தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு சுகாதார பிரிவினர் ஊடாக தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்.

தமிழகம் ஊடாக யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதை சுகாதார அமைச்சு எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்திலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழையும் இவ்வாறானவர்களால் அந்த எச்சரிக்கை உறுதிப்படுத்தப்படுவதாக உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுரேஸ் என்பவரை விசாரணைக்குட்படுத்தி, கொரோனா பரிசோதனையும் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தியாவில் பெருகிவரும் கொரோனா அச்சத்தினால் அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.