
201 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயற்சி: யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் கைது
வவுனியா - பறயநாலங்குளம் பகுதியில் 201 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த கூலர் ரக வாகனத்தை நேற்று காலை வவுனியா பறயநாலங்குளம் சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் பொலிஸார் வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டு, சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வாகனத்தின் சாரதியான யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் குருநாகல் பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து குறித்த கூலர் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும், மீட்கபட்ட கஞ்சாவின் பெறுமதி இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.