
புலனாய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவல்; மரண தண்டனைக் கைதிகளின் சிறைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்!
வெலிகட சிறைச்சாலையில் செப்பல் விடுதியின் ஜீ 3 சிறை பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 96 ஆம் இலக்க சிறை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று செல்போன்கள் மற்றும் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
சிறைச்சாலையில் பணியாற்றும் நபர்களின் உதவியுடனேயே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப் பொருட்கள், செல்போன்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து காலை மற்றும் மாலை நேரத்தில் நடத்திய தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறை அறையில் நிலத்திற்கு அடியில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றிய செல்போன்கள் மற்றும் போதைப் பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.