
உலகக்கிண்ண சர்ச்சை விவகாரம் தொடர்பில் வெளியாகியுள்ள விடயம்!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி பணத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அந்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்தாது முறைப்பாட்டை செய்த விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பொன்சேகா,
எமது பிரிவின் அதிகாரிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் நடைபெற்றது. இதில் எமது பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதிப் பணிப்பாளர் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதன் போது விசாரணைகளை நிறைவு செய்வது என நாங்கள் தீர்மானித்தோம்.
அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் வரவழைத்து வாக்குமூலம் பெறும் நடவடிக்கை சர்ச்சைக்குரிய நிலைமையாக தற்போது மாறியுள்ளது. இதனால், பெரிய பிரச்சினை ஏற்படலாம். எமது விசாரணைப் பிரிவினர் பெற்றுக்கொண்ட மூன்று வாக்குமூலங்களின் அடிப்படையில் மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த 14 விடயங்களை உறுதிப்படுத்த முடியாது என எமக்கு தெரியவந்துள்ளது.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு கடிதம் அனுப்பியதாக கூறினாலும், அதற்கு சர்வதேச கிரக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பதிலளிக்கவில்லை. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் விசாரணைகளை நடத்தவில்லை.
எம்மிடம் வாக்குமூலம் வழங்கிய மூவரும் நியாயமான காரணங்களை கூறியுள்ளனர். குறிப்பாக அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளனர். மேலும் இது 2011 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.