
மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
கொழும்பு - 13 பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சுகாதார பரிந்துரைகளைப் பெற்றுக்கொடுக்குமாறு முன்னணி ஆசிரியர் சங்கம் கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லினின் கையொப்பத்துடன் ஜூலை 3 திகதியிடப்பட்டு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொழும்பு 13, ஜிந்துபிட்டி பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரே நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குறித்த நபரின் உறவினர்கள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையை அண்மித்து அமைந்துள்ள பாடசாலைகளில் இப்பகுதியில் வசிக்கும் பல சிறுவர்கள் கல்வி கற்பதை நினைவு கூர்ந்துள்ள ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டார்லின், பாடசாலைகளின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விடயத்தையும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு நினைவூட்டியுள்ளார்.
விவேகானந்தா தேசிய பாடசாலை, புனித அன்னம்மாள் கல்லூரி, புனித அந்தோனியார் சிங்கள கல்லூரி, புனித அந்தோனியார் சிறுவர் பாடசாலை, வுல்பெண்டல் மகளிர் கல்லூரி, ஹமீத் அல்-ஹுசைனியா தேசிய பாடசாலை, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி, மத்திய கொழும்பு இந்து கல்லூரி, கொட்டாஞ்சேனை சிங்கள ஆரம்ப பாடசாலை, பதிர்தீன் மொஹமட் மகளிர் கல்லூரி ஆகியன ஜிந்துபிட்டி பிரதேசத்தை அண்மித்து காணப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைத் மீளத் திறப்பதற்கு முன்னர் சுகாதாரத் துறையிடம் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறே ஸ்ரீலங்கா ஆசிரியர் சங்கம் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளது.