கொரோனா தொற்றுக்கு மத்தியில் இராணுவத்தளபதியின் நெருங்கிய உறவுகளுக்கு ஆடம்பர ஹோட்டலில் திருமணமா?

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இராணுவத்தளபதியின் நெருங்கிய உறவுகளுக்கு ஆடம்பர ஹோட்டலில் திருமணமா?

இராணுவத் தளபதியும், கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று முன்தினம் தனது மருமகளின் திருமணம் கொழும்பின் ஒரு முன்னணி ஆடம்பர ஹோட்டலில் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்றது என்று சமுக வலைத்தளமொன்றில் வெளியான செய்தியை முற்றாக மறுத்ததுடன் , இது தன்னை நோக்கி வேண்டுமென்று மேற்கொள்ளப்படும் தேவையற்ற ஒரு பிரசாரம் எனவும் தெரிவித்தார்.

ஷவேந்திர சில்வாவின் மருமகளின் திருமணம் என்று கூறி பலசமுக வலைத் தளங்களில், மணமகனும், மணமகளும் நிற்கும் படங்கள் மற்றும் சில்வா மற்றொரு இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிப்பதைக் காட்டும் மற்றொரு படம் வெளியாகி இருந்தன.

இந்த திருமணத்தை நேற்று முன்தினம் பகலில் நடத்த அனுமதிக்கவே திங்கள் நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்து திருமணங்களையும் தடை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், தனது இரு மருமகள்களும் 16 மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்கள் என்று தெரிவித்த ஷவேந்திரசில்வா, அவர்கள் திருமணம் செய்ய இன்னும் காலம் உள்ளதாகவும் இது தன்மீது சேறு பூசும் நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

"என் சகோதரியின் மகள்கள் தற்போது மாணவர்களாக உள்ளனர். எனவே இந்த செய்தி அபத்தமானது. என் குடும்பத்தில் அல்லது எனது தொலைதூர குடும்பத்தில் கூட யாரும் வரவிருக்கும் இரண்டு வருடங்களுக்கு  திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

சீருடையில் இருக்கும் எனது படம் நான் இராணுவத் தளபதியாக பதவியேற்ற நாள், "என அவர் தெரிவித்தார்.

தன்மீது சேறு பூசும் நடவடிக்கையை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தினார், மேலும் COVID-19 மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்ற மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.